பல கோடி அரசு நிலத்தை அபகரித்து ஸ்வாஹா செய்த இணை சார்பதிவாளர்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்து ஸ்வாகா செய்த இணை சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பஸ் நிலையம் அருகே பத்மானபபுரம் நகராட்சிக்கு ஆறு சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலம் சிலரால் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
நெல்லையை சேர்ந்த கோமதி நாயகம், தூத்துக்குடியை சேர்ந்த பிரம்மநாயகம், செய்துங்கநல்லூரை சேர்ந்த ராமலிங்கம், மூலக்கரைபட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்த இடம் ஒரு கோயிலுக்கு சொந்தமானது என்று கூறி போலி பத்திரம் தயாரித்துள்ளனர். பின்னர் இந்த நிலத்துக்கான பவர் நாங்குநேரி அருகே கீழமாவடியை சேர்ந்த ஜாண்சன் என்பவருக்கு எழுதி கொடுக்கப்பட்டது.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையை சேர்ந்த ஜெயச்சந்திரசேகர் என்பவருக்கு விற்றுள்ளார். இதற்கு தக்கலை சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார்-பதிவாளராக வேலை பார்த்த மணி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த விபரங்களை உள்ளடக்கி பத்மனாபபுரம் நகராட்சி ஆணையர் டெல்லிஸ் ராய், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார். இதுபற்றி நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இணை சார்பதிவாளர் மணி உட்பட ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலத்தின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது.