ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து திடீர் மரணம்.. பூர்வ ஜென்ம "சாபமா"??.. அச்சத்தில் மக்கள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். ஆனால் எந்த மரணத்துக்கும் இதுவரை காரணம் ஏதும் தெரியவில்லை.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். ஆனால் எந்த மரணத்துக்கும் இதுவரை காரணம் ஏதும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது.
திருவண்ணாமலை தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி விமல்ராஜ். இவரது மகன் பிரேம் சரண் (4). இவர் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டார்.
மர்ம சாவு
அவர் திங்கள்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வாட்னியர் தெரிவிக்கையில், 3 நாள்களுக்கு முன்னர் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை திங்கள்கிழமை மிகவும் மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் வாந்தி எடுக்க தொடங்கினார். பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
டெங்கு இல்லை
அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. கடுமையான வயிற்றுப்போக்கால் சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். எனினும் அவரது இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும்.
மருத்துவக் குழு
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மர்ம காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை வீடுதோறும் ஆய்வு செய்ய மருத்துவக் குழுவினரை அனுப்பினோம். ஆனால் அந்த கிராமத்தில் காய்ச்சலால் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. சிறுவன் சரணின் பலியாவதற்கு முன்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் இறந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.
அடுத்தடுத்து மர்ம மரணம்
விமல்ராஜின் குடும்பத்தில் அடுத்தடுத்து காரணமின்றி மரணம் ஏற்பட்டு வருவது திகிலை கிளப்பி வருகிறது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி கிறிஸ்டோபர் இறந்த அதே மாதத்தில் விமல்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வினோத்குமார் (23), நெல்சன் (11), கிருத்திகா மெர்லின் (7), நெல்சனின் தாத்தா ஜோசப் (70), மெர்லினின் பாட்டி கிறிஸ்டா (65) ஆகிய 5 பேரும் இறப்பதற்கு முன்னர் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்தனர்.
எலி பாசானம்
கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி உயிரிழந்த கிறிஸ்டாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கல்லீரல், கிட்னி, ரத்த மாதிரிகளில் மஞ்சள் பாஸ்பரஸ் (எலி பாசானம்) இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இறப்புகள் நடந்த அக்டோபர் மாதத்துக்கு பிறகு, விமல்ராஜின் குடும்பத்தினருடன் அவரது நண்பர்களும், அக்கம்பக்கத்தினரும் தொடர்பில்லாமல் ஒதுங்கியே இருந்தது.
சாபமா
இந்த குடும்பத்துக்கான சாபத்தாலே விமல்ராஜின் வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்கின்றன என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த விமல்ராஜின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். கிறிஸ்டாவின் உடல் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 5 பேரின் உடல்களை குடும்ப உறுப்பினர்களே அடக்கம் செய்துவிட்டனர். இதனால் இந்த வழக்கில் போதிய ஆதாரம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஒருவர் தப்பினார்
கிறிஸ்டாவின் இறப்புக்கு பிறகு, வின்சென்ட் பிராபகர் என்பவரும் அதே நோய் அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது உடலில் பாஸ்பரஸ் இருந்ததாக தடங்கள் இல்லை. 45 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வின்சென்ட்டின் உடல்நிலை குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மூத்த மருத்துவ அதிகாரிகளுக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு சிறுவன் சரண் இறந்துள்ளார். இதற்கான காரணங்கள் தெரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.