மீன்பிடி தடை முடிந்து கடலுக்குள் சென்ற 7 மீனவர்களை சிறைபிடித்த இலங்கைப் படை!
ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே இவ்வாறு இலங்கைப் படையினர் நடந்து கொண்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் அமலில் இருந்து வந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நேற்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை மீட்கக் கோரி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.