பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை.. சிவகாசியில் பயங்கரம்
சிவகாசி: சிவகாசி அருகே பெற்ற குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி அருணா. இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு காஷ்மா (7) என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாம் வகுப்பு படித்து வருகிறது.
இதனிடையே கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முனியசாமி, பெண் குழந்தையை தூக்கி கடம்பன் குளம் கண்மாயில் உள்ள கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார். எந்தத் தவறையும் செய்யாத 7 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த முனியசாமி, சாத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் முனியசாமியை சிவகாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.