டிஜிட்டலுக்கு மாறும் அரசு கேபிள் டிவி -70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச செப்டாப் பாக்ஸ்
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதோடு, 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளன.
சென்னை : தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது, இதற்கான பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்படுகிறது.
தனியார் கேபிள் டிவிக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தைப் புனரமைத்துப் புத்துயிரூட்டி, 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 90-100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கிவருகிறது.
குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு, 4.94 லட்சங்கள் என இருந்த இந்த நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, தற்போது, 70.52 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது அரசு கேபிள் டி.வியின் கீழ் 27 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் சுமார் 70.52 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கேபிள் டி.வி. சேவை அனலாக் தொழில்நுட்ப முறையில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவையை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
பணிகள் தொடக்கம்
அதன்படி தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு சேவையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உள்பட தேவையான தகவல்களை பதிவு செய்வதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கேபிள் டி.வி. நிறுவனம் உத்தரவிட்டது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள், தங்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்புக்கான எஸ்.டி. மற்றும் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன
அரசு கேபிள் டிவியின் ஒளிபரப்பில் வரும் சேனல்களுடன் அதாவது இலவச சேனல்கள், கட்டண சேனல்களுடன் கேபிள் டி.வி. நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், கட்டண சேனல்களுக்கு எவ்வளவு சந்தா செலுத்த வேண்டும் என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன.
அந்த வகையில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தையும் கேபிள் டி.வி. நிறுவனம் செய்து முடித்துவிட்டது.
அவகாசம்
அரசு கேபிளின் டிஜிட்டல் முறை ஒளிபரப்பில் எந்தெந்த சேனல்களை பெற ஆபரேட்டர்க்ள் விரும்புகிறார்கள், எந்தவித செட்டாப் பாக்ஸ்களை விரும்புகிறார்கள் என்ற விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்று உத்தரவிட்ட மத்திய அரசிடம் தமிழக அரசு இரண்டு முறை அவகாசம் கோரியுள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது, என்றாலும் ஒளிபரப்பு சேவையை தொடங்குவதற்கான நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.
நியாயம் இல்லை
இந்தியா முழுவதும் டிஜிட்டல் முறையை கொண்டுவருவதற்கான அறிவிப்பை 2011-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு 5 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. ஆனால் 17.4.17 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தமிழக அரசு 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவில் நியாயம் இல்லை. தமிழக அரசும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக காலஅவகாசத்தைக் கேட்டுப் பெற்று வருவதாக அதில் கூறியுள்ளது.
இலவச செட்டாப் பாக்ஸ்
இந்த நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு முறையையும், இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தையும் இம்மாத இறுதியில் முதல்வர் தொடங்கிவைக்கிறார். பின்னர் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் ஜெயலலிதா அறிவித்தபடி 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் விதமாக சில நிறுவனங்களிடம் அரசு டென்டர் கோரியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.