700 பேரை நடுகடலில் சுட்டுக் கொன்ற சிங்கள கடற்படை.. இப்போது பலி பிரிட்ஜோ.. என்ன செய்யப் போகிறார் மோடி
இதுவரை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடு கடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கடைசி நபராக 21 வயதான பிரிட்ஜோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடுக்கு பலியாகியுள்ளார்.
சென்னை: தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் அருகில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதான பிரிட்ஜோ என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் சரோன் என்ற மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
தொடரும் சோகம்
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து துன்புறுத்துவது தொடர்கதையாகிவிட்டது. மீனவர்களிடம் இருந்து வலைகளைகள் மற்றும் படகுகளை பிடுங்கி கொண்டு துரத்தி அடிப்பது அன்றாடம் நடந்து வருகிறது.
700 சுட்டுக் கொலை
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துவிட்டார்கள் என்றும் அதனால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறி இதுவரை 700க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. இதனை தடுக்க இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணுவதற்கு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இதுவரை செய்யவில்லை.
கடைசி பலி பிரிட்ஜோ
மத்திய அரசின் மெத்தனப் போக்குதான் பிரிட்ஜோ உயிர் இலங்கை துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானதற்கு காரணம் என்று தமிழக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 21 வயதான பிரிட்சோ உயிர் போனதுதான் தமிழக மீனவர்களின் கடைசி உயிராக இருக்க வேண்டும் என்று தங்கச்சி மட மீனவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
இனியும் தொடரக் கூடாது..
இலங்கை அரசின் இந்த கொலை வெறி தாக்குதலில் இருந்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரியுள்ளனர். மத்திய அரசால் படகுகளை மீட்டுத் தர முடியவில்லை என்றால் மீனவர்களின் உயிரையும் காப்பாற்றி கொடுக்க முடியவில்லை. மத்திய அரசு இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது. மறுபடியும் கொலை செய்ய தொடங்கியுள்ள இலங்கை அரசை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தங்கச்சி மட மீனவர்கள் கோரியுள்ளனர்.