உள்ளாட்சித் தேர்தல்: கிராமங்களில் 2,17,500 ஓட்டுப்பெட்டிகள்: நகரங்களில் 75,933 மின்னணு இயந்திரங்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும், நகர்ப்புற பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நகர்பகுதிகளில் 75 ஆயிரத்து 933 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
முதன்முறையாக ஊரக உள்ளாட்சிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு புதிய முயற்சிகள் திட்டத்தின் கீழ் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் 2011ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மேயர், நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் 1,31,794 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 12 மாநகராட்சியில் 919 கவுன்சிலர் பதவிகள், 124 நகராட்சிகளில் 3,613 கவுன்சிலர்கள், 316 மாநகராட்சிகளில் 56 கவுன்சிலருக்கான பதவிகள், 12,534 சிற்றூராட்சிகளில் 99,324 சிற்றூராட்சித் தலைவர் பதவிகள், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6,471 வார்டு உறுப்பினர்களும் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டுகட்டத் தேர்தலாக நடக்க உள்ளன. தமிழகத் தேர்தல் ஆணையர் சீத்தாராமன் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டார்.
வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 3.10.2016 கடைசி நாள். வேட்புமனு தாக்கல் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை 4.10.2016 அன்று நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெறும் நாள் 6.10.2016. வேட்புமனுவை காலை பத்து மணி முதல் மூன்று மணிக்குள் திரும்ப பெற்றுவிட வேண்டும். டெபாசிட் தொகையில் எந்த மாற்றமும் இல்லை.
அக்டோபர் 17
முதற்கட்டமாக 17ம் தேதி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3250 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கும், 6444 கிராம ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
அக்டோபர் 19
இரண்டாம் கட்டமாக 19ம் தேதி சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 322 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3221 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 48,684 கிராம ஊராட்சி வார்டுகள், 6080 கிராம ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 21ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கும்.
26ம் தேதி பதவியேற்பு
உள்ளாட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு அக்டோபர் 26ம் தேதி நடைபெறும். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நவம்பர் 2ம் தேதியும் நடைபெறும்.
75,933 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழகம் முழுவதும் 9,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 5,531 வாக்குச்சாவடிகள்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்படும்.
நகர்ப்புற பகுதிகள் 34 ஆயிரத்து 515 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 41 ஆயிரத்து 418 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் என மொத்தம் 75 ஆயிரத்து 933 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் முதன்முறையாக
முதன்முறையாக ஊரக உள்ளாட்சிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு புதிய முயற்சிகள் திட்டத்தின் கீழ் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து 12 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்