ஜெயலலிதா மறைவு.. அதிர்ச்சியில் உயிரிழந்த 77 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ3 லட்சம் நிதியுதவி
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட மனவேதனையில் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்தும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து மரணமடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நில நிதியுதவியாக வழங்கப்படும் எனவும் அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மக்கள் நெஞ்சங்களில் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அம்மாவாக என்றும் வாழும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்துசென்றார் என்ற செய்தியைக் கேட்டும் மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகால மரணமடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குன்றிய செய்தி அறிந்து துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர் சிகிச்சை பெற்றுவரும் கடலூர் கிழக்கு மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியம், புதுகூரப்பேட்டை கிளைக் கழகச் செயலாளர் கணேசனின் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதோடு, கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, மறைந்த துக்கத்தில் தனது விரலை வெட்டிக்கொண்ட திருப்பூர் மாவட்டம், உகாயனூரைச் சேர்ந்த மாகாளி, முழுசிகிச்சை பெற்று, நலம்பெறத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதோடு, கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அ.தி.மு.க. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.