மழை: இன்றும் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: நாடா புயல் கரையை கடந்தாலும் இன்றும் மழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னையை நோக்கி நகர்ந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை புயலாக மாறியது.
நாடா என்று பெயர் வைக்கப்பட்ட இந்த புயலால் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் நாடா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காரைக்கால் அருகே இன்று காலை கரையை கடந்தது.
நாடா கரையை கடந்தாலும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுடன், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்றும் தமிழகத்தில் மழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.