உமா மகேஸ்வரி கொலை வழக்கு - 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை: சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்தவர் உமாமகேஸ்வரி.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இரவு 10.30 க்கு பணி முடிந்து வீடு புறப்பட்டார்.
கற்பழித்துக் கொலை:
அவர் நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து ரோட்டில் நடந்து வந்த போதுதான் அந்த கொடூரம் நடந்தது.அடையாளம் தெரியாத நபர்களால் உமாமகேஸ்வரி கடத்திச் செல்லப்பட்டார். அங்குள்ள காட்டு பகுதியில் வைத்து கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றம்:
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால், சூப்பிரண்டு நாகஜோதி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
வட இந்திய தொழிலாளிகள்:
தமிழகத்தையே உலுக்கிய இந்த படுகொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கினார்கள். உமாமகேஸ்வரியை தீர்த்துக்கட்டியதாக கொலை நடந்த பகுதியில் கட்டிட வேலை பார்த்த மேற்கு வங்காள மாநில தொழிலாளிகள் உஜ்ஜன் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 பேரும் சிறையில் அடைப்பு:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் 3 பேருக்கும் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடித்து விட்டனர்.
850 பக்க குற்றப்பத்திரிக்கை:
கொலையாளிகள் 3 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்தனர். நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தாக்கல்:
குற்றப்பத்திரிக்கையில் உமாமகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.