பாகுபலியை பாராட்டிய வைரமுத்து... நெகிழ்ந்த ராஜமெளலி!!
சென்னை: இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் பொறிக்கப்படும் என்று பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்கடிதம் எழுதியுள்ளார். இதனை தனது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ள ராஜமௌலி, ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.
பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ள இந்த படம் பற்றிதான் கடந்த ஒருமாதகாலமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என அனைவரும் இந்த படத்தினையும், நடிகர்களையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.
வைரமுத்து வாழ்த்து
பாகுபலி படம் குறித்து இயக்குநர் ராஜமௌலிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இது செல்லுலாய்டில் எழுதப்பட்ட இன்னொரு இதிகாசமா என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
கவிஞனைக் கண்டேன்
பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப் பெண், பட்டாம்பூச்சிகள் பறந்து போவதைப் போல கலைந்து போனாள் என்று காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு கவிஞனைக் கண்டேன்.
கம்பனின் கற்பனை
கட்டப்பா உறையைத் தொட பாகுபலி வாளை உருவ, வெட்டப்பட்ட முண்டம் தொடர்ந்து ஓடும் காட்சியில் கம்பனின் கற்பனையைக் கண்டேன்.
பெருமைப்படுகிறேன்
போர்க்களக் காட்சியின் நேர்த்தி, இந்திய சினிமாவின் உலக விலாசமாய் உங்கள் பெயர் நாளை பொறிக்கப்படும். உங்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
உலுக்கிய பாராட்டு
|
உலுக்கிய பாராட்டு
அதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜமெளலி, அதைப் பற்றி குறிப்பிடும்போது...பாகுபலி படத்துக்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், கவிஞர் வைரமுத்துவின் பாராட்டு என்னை உலுக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
அருமையான ஆசிரியர்
இந்தப் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. ஒரு லெஜண்டிடம் இருந்து வாழ்த்துகளைப் பெறுவதாகவே எண்ணுகிறேன். ஒரு அருமையான ஆசிரியரிடம் இருந்து ஒரு மாணவனுக்குக் கிடைத்த வாழ்த்து இது என்று கூறியுள்ளார்.