உளுந்தூர்பேட்டையில் உதவி தொகை வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்ட விஏஒ அதிரடி சஸ்பெண்ட் !
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூர் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாக கூறப்படுகிறது.
நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம் இல்லை என சிறுவன் அஜித்குமார் கூறி இருக்கிறார். ஆனாலும், பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகையை பெற முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறவே மனமுடைந்த சிறுவன் அஜித்குமார், குன்னத்தூரில் வீடு வீடாக சென்று உறவினர்கள், நண்பர்களிடம் பிச்சை எடுத்துள்ளார். இதன் மூலம் அஜித்துக்கு ரூ.2,000 சேர்ந்தது. லஞ்சம் கொடுப்பதற்காக பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
என் அப்பாவின் ஈம சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை. என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ.என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி சிறுவன் பிச்சையெடுத்தான்.
அரசின் உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க, எனக்கு பிச்சை போடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படவே, போலீசார் மற்றும் தாசில்தார் அடங்கிய அதிகாரிகள் டீம், ம.குன்னத்தூர் கிராமத்தில் முகாமிட்டு சிறுவன் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் குன்னத்தூர் வி.ஏ.ஒ சுப்ரமணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.