கழிவறையில் சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை... தந்தையை கவ்விப் பிடித்த மோப்ப நாய்!
கடலூர்: கடலூர் மாவட்டம் சித்தேரியில் கழிவறையில் சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நிதிஷ் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். வழக்கம்போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து செவ்வாய்க்கிழமை மாலை விளையாடி கொண்டிந்த சிறுவன், திடீரென மாயமானார்.
இதனால், தனது மகனை காணவில்லை என பெற்றோர் அங்கும் இங்கும் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் கழிவறையில் நிதிஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியில் உரைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடலூரில் இருந்து கை ரேகை நிபுணர்களும், மோப்பநாய் வரவழைத்து வீட்டிலும் அங்கு உள்ள பகுதிகளிலும் தடையங்களை ஆராய்ந்தனர். மோப்பநாய்களைக் கொண்டு சோதனை நடத்தினர்.
அப்போது, மோப்பநாயானது சிறுவனின் தந்தை முருகேசனை சுற்றி வந்து கவ்வி பிடித்தது. இதையடுத்து முருகேசனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், முருகேசன் தனது மகன் உயிரிழந்த நிலையில் இருக்கும் போது தூக்கினேன் என்று கூறியுள்ளார். கழிவறையில் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.