கிழக்கு கடற்கரை சாலையில் நின்ற காரில் திடீர் தீ... பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலி
காஞ்சிபுரம் மாவட்டம் மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பிடித்தது. இதில் காரில் இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை என்ற இடத்தில் கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரில் தீ பிடித்து எரிந்தது. அப்போது காரில் இருந்த 3 பேரும் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக் கொண்டார்.
மணமை கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். காரில் இருந்த நபர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து கார் கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் கார் தீயை அணைத்தனர்.
இதில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த காருக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவால் தீப்பற்றியதா என்பது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மூவரும் குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.