கரூர்: சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ்
கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.
கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜனவரி 27ஆ தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். ஆனால் மாணவனால் எழ முடியவில்லை. இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர்.
இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார்.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியபோது, "மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்" என்றார்.
நடவடிக்கை சரியா
போதையில் மாணவன் மயங்கி விழா காரணம் யார் என்பதை அறிந்து அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் மாணவனை மட்டும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.