கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்... காதல் மனைவியை கொன்று வீட்டிலே புதைத்த கணவன் கைது
கிருஷ்ணகிரி: காதல் மனைவியை கொலை செய்து வீட்டு மாட்டு கொட்டகையில் புதைத்த கொடூர கணவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரகப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து அனில்குமார் கர்நாடக மாநிலம், கோடள்ளி என்ற பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி திரிவேணியிடம் பேசிய அனில்குமார் அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். அதை நம்பி, திரிவேணி, அனில்குமார் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார்.
அதன் பின்னர் திரிவேணியிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரின் பெற்றோர்கள் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் அனில்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தனது மனைவி திரிவேணியை தனது சொந்த கிராமமான தளி அருகே உள்ள சாரகப்பள்ளிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பிறகு உடலை வீட்டின் மாட்டு கொட்டகையில் புதைத்து விட்டதாகவும் கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழக போலீசார் உதவியுடன் உடலை தோண்டி எடுத்த போலீசார் அதே இடத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உடலை எரித்தனர். பின்னர் கர்நாடக போலீசார் அனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.