கரூர் அருகே 12ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!
கரூர் அருகே சிறுமி ஒருவர் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர்: 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா. கடந்த 2014ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த இவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.
விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள கொசு வலை நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடினர்.
அப்போது சாலையோரம் வினிதாவின் சைக்கில் கிடந்ததைக் கண்ட கிராமத்தினர் அங்கு தொடர்ந்து தேடினர். வயல்வெளியில் வினிதா அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் ராமச்சந்திரன் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.