மதுரை: காணாமல் போன சிறுவன்... நிர்வாண நிலையில் உடல் மீட்பு... 3 பேர் கைது... ஓரினச் சேர்க்கையா..?
மதுரை: மதுரை அருகே காணமல் போன சிறுவன் அங்குள்ள கழிவு நீர் வாய்க்கால் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது உச்சப்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சார்ந்தவர் சுந்தரப்பாண்டியன் இவரது மகன் அருண்குமார். அருண்குமார் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 24-ம் தேதி பள்ளி விடுமுறை தினம் என்பதால் மாலையில் அப்பகுதியில் விளையாட சென்ற சிறுவன், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசில் புகார்
இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் 25-ந் தேதி புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இன்று மதியம் உச்சப்பட்டி -முனியாண்டி புறம் சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சிறுவன் உடல்
திருப்பரங்குன்றம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமசாமி தலைமையில் விரைந்து வந்த போலீசார் பாலத்தின் அடியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு நிர்வாண நிலையில் சிறுவன் உடல் கிழிந்த துணியால் சுற்றப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் கிடந்ததைக் கொண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட போலீஸார் மதுரை தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
என்ன காரணம்?
சிறுவனின் உடல் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதால், சிறுவனை ஓரின சேர்க்கைக்காக அழைத்து வந்து கொலை செய்து புதைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.