தம்பித்துரையிடம் பன்னீர் செல்வம் கொடுத்த கவரில் இருந்தது என்ன?
சென்னை : தமிழகத்தின் தலைமையே அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தலைமைச் செயலகமும் அங்கேயிருந்துதான் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் அனைத்து அப்பல்லோவில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. ஜெயலிதா மருத்துவமனையில் இருந்தாலும் எதுவும் முடங்கி விடவில்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க நேற்று எம்.பி. தம்பித்துரையிடம் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொண்டு வந்து கொடுத்த கவர் பற்றிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதித்த நாளில் இருந்தே அமைச்சர்களின் முழுக் கவனமும் அங்குதான் மையம் கொண்டுள்ளது. முதல்வரைப் பார்க்க இதுவரைக்கும் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஒருவேளை திடீரென அனுமதி கொடுத்து, அந்த நேரத்தில் நாம் இல்லாமல் போய்விடக்கூடாது என்ற பயத்தில்தான் அமைச்சர்கள் காலையில் மருத்துவமனைக்கு வந்தால், இரவு வரை யாரும் வெளியே போவதே இல்லை.
மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் இருந்து அனைவருக்கு உணவு பறிமாறப்படுகிறது. தரைத்தளத்தில் கெஸ்ட்டுகளுக்கான டைனிங் ஹால் இருக்கிறது. அங்கே வைத்துதான் அனைவருக்கும் உணவு கொடுக்கிறார்கள். சசிகலாவுக்கும், இளவரசிக்கும் மட்டும் மூன்று வேளையும் உணவு போயஸ் கார்டனில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
ஜெயலலிதா கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அதிமுக தொண்டர்கள் பலர் அப்பல்லோ வாசலைவிட்டு நகரவே இல்லை. ஊடகத்துறையினர் ஷிஃப்ட் முறையில் ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கேமரா மட்டும் அப்படியே நகராமல் இருக்கிறது. ஊடகத்துறையினரை நன்றாக கவனிக்கச் சொல்லி செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அப்பல்லோ நிர்வாகத்துக்கு உத்தரவு போயிருக்கிறது.
பலமான கவனிப்பு
செய்தி சேகரிக்க வந்து காத்திருக்கும் அனைவருக்கும் உணவும், நீரும் சரியாக கொடுக்கப்படுகிறது. இதேபோல, அங்கே பணியிலிருக்கும் காவல் துறையினருக்கும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறது அப்பல்லோ நிர்வாகம். அமைச்சர்களும் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போதும் வெளியே போகும்போதும் காரை நிறுத்தி, 'எதுவும் சாப்பிட வேணுமா.. எல்லாம் கொடுக்கிறாங்களா?' என அக்கறையுடன் கேட்டுவிட்டுத்தான் போகிறார்கள்.
பன்னீர் செல்வம் பரபரப்பு
வியாழக்கிழமையன்று காலையில் அமைச்சர்கள் வந்தபோது ஓ.பன்னீர்செல்வமும் வந்துவிட்டார். தம்பிதுரையுடன் சற்றுநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தவர், 11 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டார். அவர் கார் நேராகப் போன இடம், கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு. அங்கிருந்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் 12 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். தம்பிதுரையிடம் ஒரு கவரில் எதையோ கொண்டுவந்து கொடுத்தாராம் பன்னீர்செல்வம்.
தம்பித்துரையிடம் கவர்
தம்பிதுரை அதை வாங்கிக்கொண்டு பன்னீரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். மறுபடியும் அடுத்த அரை மணி நேரத்தில் பன்னீர் மருத்துவமனையில் இருந்து கிளம்பி வீட்டுக்குப் போனார். 2 மணிக்கு மீண்டும் திரும்பி மருத்துவமனைக்கு வந்தார். தம்பிதுரை என்ன கேட்டார்? அதற்கு பன்னீர் செல்வம் என்ன கொண்டு வந்து கொடுத்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
ரகசிய மீட்டிங்
புதன்கிழமையன்று சசிகலா குடும்பத்தினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி விட்டு வந்ததில் இருந்தே பன்னீர்செல்வம் சோகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சசிகலா குடும்பம் பன்னீர்செல்வத்துடன் நடத்திய ரகசிய மீட்டிங்குக்கும், அதைத் தொடர்ந்து நேற்று பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து கவரைக் கொண்டுவந்து தம்பிதுரையிடம் கொடுத்ததற்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
கவரில் இருந்தது என்ன?
ஜெயலலிதா உடல்நிலை சார்ந்த விஷயங்கள் சசிகலா குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சசிகலா குடும்பத்தினர் பன்னீர் செல்வத்திடம் கூறியது என்ன? தம்பித்துரையிடம் அவர் கொண்டு வந்த கவரில் என்ன இருந்தது என்பதும் இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.