வங்கக் கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: லேசான மழை பெய்யும்- வானிலை மையம்
சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மேற்கு வங்கக் கடலில் அடுத்த 2 நாளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய பாலச்சந்திரன், மேலும், மேற்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஈரப்பதத்துடன் காற்று வீசுவதாலும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
சென்னையை பொறுத்த வரை, ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் 6 செமீ மற்றும் புதுச்சேரியில் 5 செ மீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவகாலத்தில் ஆகஸ்டில் பெய்த மழை அளவு 170 மிமீ என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவகாலத்தில் ஆகஸ்டில் பெய்யும் இயல்பான மழை அளவு 183 மிமீ பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.