சென்னை-கன்னியாகுமரி இடையில் கடல்வழியாக இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சர் தகவல்
சென்னை: சென்னை-கன்னியாகுமரி இடையில் கடல்வழியாக இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 7 கிலோ மீட்டர் தொலைவில் 4-வது ரயில் பாதை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கி எந்திரம். சென்னை கோட்டத்துக்குட்பட்ட 17 ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகள். மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி மையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதேபோல் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யும் எந்திரம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் வை-பை வசதி உள்ளிட்ட திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.
விழாவில் பேசிய, சென்னை - கன்னியாகுமரி இடையில் கடல்வழியாக இருப்புப் பாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து புதிய திட்டத்தை அமைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.