தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களாக ஆ. ராசா, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன்?
சென்னை: தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, திண்டுக்கல் ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தி.மு.க.வில் அனைத்து பொறுப்புகளுக்குமான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 9-ந் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. இதில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தி.மு.க. தலைவராக 11வது முறையாக கருணாநிதியும், பொதுச் செயலாளராக 10வது முறையாக க. அன்பழகனும் பொருளாளராக மு.க.ஸ்டாலினும் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கட்சியின் முதன்மைச் செயலாளராக உள்ள ஆர்க்காடு வீராசாமியின் உடல்நிலை கருதி தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் முதன்மைச் செயலாளராக துணைப் பொதுச்செயலராக இருக்கும் துரைமுருகன் நியமிக்கப்பட இருக்கிறார்.
மற்றொரு துணைப் பொதுச்செயலரான சற்குண பாண்டியனும் உடல்நலம் கருதி தம்மை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி வருவதால் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
அத்துடன் தி.மு.க. தலைமைப் பொறுப்பில் முக்குலத்தோருக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் தரும் வகையில் ஆ. ராசா ஆகியோரை துணைப் பொதுச் செயலாளர்களாக்கவும் அக்கட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.