காவிரி : பிள்ளையை பெத்தது நாங்க... தூக்கிட்டு ஓடினவருக்கு பட்டமா? ஜெ. மீது ஆ. ராசா காட்டம்!
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு என அனைத்தையும் பெற்றுக் கொடுத்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி.. ஆனால் அரசு கெஜட்டில் தீர்ப்பு வெளியிட்ட ஒரே காரணத்துக்காக ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வின்னு பட்டம் கொடுப்பதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரண்மனை தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசியதாவது:
வாரிசு அரசியல் உண்டு
தி.மு.கவில் வாரிசு அரசியல் இருக்கிறது...இல்லையென்று சொல்லவில்லை. ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, ஒடிசா நவீன் பட்நாயக், ஹரியானாவின் சௌதாலா, உத்தரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் எந்த தியாகத்தையும் செய்யாமல் முதல்வர்களாக அமைச்சர்களாக இருக்கும்போது கருணாநிதியின் லட்சியத்துக்காக வாழும் ஸ்டாலின் வாரிசாக இருக்ககூடாதா? ஆனால், அவர் இன்னும் முதலமைச்சர் ஆகவில்லையே.
2 லட்சம் கோடி கடன்
கடந்த அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு 55,000 கோடி கடனாக வைத்து கஜானாவை காலியாக்கியது தி.மு.க என்று சொன்னார்கள். ஆனால் இன்று அவர்களின் ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி கடன் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.
எல்லாமே தி.மு.க. ஆட்சியில்..
1967-க்கு பின் தமிழக, கர்நாடக அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தையை நடத்தி தீர்மானம் போட்டு காவிரி நடுவர் நீதிமன்றம், இடைக்கால நிவாரணமாக 225 டி.எம்.சி தண்ணீர், ஒழுங்குமுறை ஆணையம் என அமைக்கப்பட்டது கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான். கடைசியில் தீர்ப்பு அரசு கெஜட்டில் வெளியானது மட்டும் அ.தி.மு.க ஆட்சியில்.
தூக்கிட்டு ஓடியவர்..
கல்யாணம் பண்ணி முதலிரவு நடத்தி பத்துமாதம் காத்திருந்தது ஒருவர், அவருக்கு பிறந்த குழந்தையை தூக்கிட்டு ஓடியவர் இன்னொருவர். அவருக்கு பொன்னியின் செல்வி என்ற பட்டம் வேறா?
இவ்வாறு ஆ. ராசா பேசினார்.