அப்பாக்களை மதிக்காத மகன்களே, மாமனார், மாமியாரை மதிக்காத மருமகள்களே... மறக்காம இதைப் பாருங்க!
சென்னை: பாசத்தால் கட்டுண்டு கிடந்த சமுதாயத்திலிருந்து இன்றைய சமுதாயம் விலகிப் போய் விட்டது. கூட்டுக் குடித்தனங்களுக்கு குண்டு வைத்துத் தகர்த்து நாசப்படுத்தி விட்டோம். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இன்று கூட்டுக் குடும்பங்களைக் காண முடிகிறது. தீவுத் திடல்களாகப் போய் விட்ட மனித உறவுகள், எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இந்த நிலையில்தான் இந்த வீடியோ மனதைத் தொட்டது.
சமுதாயத்தில் இன்று எது பெருகுகிறதோ இல்லையோ, முதியோர் இல்லங்கள் பெருகியபடி உள்ளன. ஏதோ ஹாஸ்டல், லாட்ஜ், ஹோட்டல் போல முதியோர் இல்லங்கள் நாளுக்கு நாள் மாடர்ன் அவதாரம் பெற்று புதிது புதிதாக முளைத்து வருகின்றன.
முன்பெல்லாம் ஆதரவற்றோருக்கு கருணை காட்டி கை நீட்டி வரவேற்கும் அபய இல்லங்களாகத்தான் இவை இருந்தன. சேவை நோக்கோடுதான் பலரும் இதை வைத்திருந்தனர். ஆனால் இன்று இது ஒரு பிசினஸ் ஆகி விட்டது. அதை வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.
அப்பாவும், மகனும்
ஒரு அப்பாவும், மகனும் முதியோர் இல்லம் ஒன்றிற்கு வருகின்றனர். தந்தையைச் சேர்ப்பது குறித்த பார்மாலிட்டிகளை அங்குள்ள ஊழியரிடம் விசாரிக்கிறார் மகன். அந்த ஊழியரும் விளக்குகிறார்.
ஏசியா... நான் ஏசியா?
ஏசி ரூம் இருக்கு, நான் ஏசி ரூம் இருக்கு. சைவமும் உண்டு, அசைவமும் உண்டு. டிவி உள்ள ரூம் வேணுமா, டிவி இல்லாத ரூம் வேணுமா. அட்டாச்ட் பாத்ரூம் உண்டு. வீடு மாதிரி இருக்கும் கவலையே வேண்டாம் என்று அந்த ஊழியர் அடுக்குகிறார்.
அப்பாவுக்கு ஏசியே கொடுங்க
அப்பாவிடம் ஒவ்வொன்றையும் கேட்டு பரிவுடன் ஊழியரிடம் தனக்குத் தேவைப்படும் அறையை பேசி முடிக்கிறார் மகன். அப்பா உங்களால வெயில் காலத்துல சமாளிக்க முடியாது. எனவே ஏசி ரூமே எடுத்துக்கங்க என்று எக்ஸ்ட்ரா பரிவு வேறு. மகனிடம் எந்தவிதமான சோகத்தையும் வருத்தத்தையும் காட்டாமல் கடைசி வரை புன்னகை பூத்தவாறு இருக்கிறார் அந்த அப்பா.
சேர்த்துட்டீங்களா...!
எல்லாம் முடித்து விட்டு காரில் வைத்திருக்கும் லக்கேஜை எடுக்க மகன் வெளியே வருகிறார். அப்போது அவரது மனைவியிடமிருந்து போன். என்ன சேத்துட்டீங்களா என்று விசாரிப்பு. அடிக்கடி வர மாட்டாரே என்ற அச்சம் கலந்த விசாரிப்பு வேறு. மகன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி பதில் தருகிறார்.
நல்லாருக்கீங்களா..?
அப்போது பார்த்து அந்த இல்லத்தின் நிறுவனரான பாதிரியார் அங்கு வருகிறார். அவரிடம் தந்தை முகம் மலர பேசுகிறார். இதைப் பார்த்து மகனுக்குக் குழப்பம். பின்னர் அப்பாவிடம் அறையைக் காட்ட ஊழியர் அழைக்கவே அவர் செல்கிறார். பாதிரியாரிடம் மகன் கேட்கிறார்.. அப்பாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா பாதர் என்று.
தத்தெடுத்ததே இங்கதானப்பா!
அவரிடம் பாதிரியார் கூறுகிறார், உங்க அப்பா இங்குதான் ஒரு அநாதைப் பையனை தத்தெடுத்தாரப்பா என்று.... மகன் முகம் இறுகிப் போகிறது. பார்க்கும் நமக்கோ கண்கள் பணித்துப் போகிறது.
இது குறும்படம்தான்.. இதில் நடப்பது போல எல்லோருக்கும் நடக்காதுதான்.. ஆனால் இப்படி நடந்தால்???.. அப்பாக்களையும், அம்மாக்களையும் மதிக்கத் தவறும் மகன்களும், மருமகள்களும் யோசிக்க வேண்டும்.. !
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..