திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.. 10 பேர் காயம்!
திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதன் 2 பெட்டிகள் தடம்புரண்டதில் 10 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் : நன்னிலம் அருகே மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்ற போது ரயில் திடீரென தடம்புரண்டது. இதில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விபத்துகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக மன்னார்குடி- மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தடம்புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டவுடன் அந்தப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.