கள்ளக்காதலை விடமறுத்த மனைவி.. வெட்டிக் கொன்ற கணவன்.. ஆரல்வாய் மொழி அருகே அதிர்ச்சி சம்பவம்!
கள்ளக்காதலை கைவிடமறுத்த மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரல்வாய்மொழி: கள்ளக்காதலை கைவிடமறுத்த மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த கணவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி அடுத்த ஆதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நளினா சாம்லெட். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நளினாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த விஜயகுமார், மனைவி நளினாவை பலமுறை கண்டித்துள்ளார்.
காதில் வாங்கத நளினா
ஆனால் அதனை காதிலேயே வாங்காத நளினா அந்த வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தரக்குறைவாக பேசவே நளினாவுடன் விஜயகுமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
வெட்டிக்கொன்ற கணவர்
இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையிலான தகராறு அதிகரித்துள்ளது. அப்போது தனது கள்ளக்காதலை விட நளினா மறுத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் நளினாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.
தோட்டத்தில் பதுங்கியிருந்த..
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நளினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணவர் விஜயக்குமாரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவோடு இரவாக தோட்டத்தை சுற்றி வளைத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
நான் இல்லாத நேரங்களில்..
இதுகுறித்து விஜயகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'எனது மனைவி நளினா சாம்லெட்டுக்கும், எங்கள் வீட்டு அருகே வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. எனது மனைவி, அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். நான் இல்லாத நேரங்களில் அந்த வாலிபர் எங்கள் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
எவ்வளவோ அறிவுரை..
அவர்களது கள்ளத்தொடர்பு பற்றி எனது உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் எனக்கு தெரிவித்தனர். 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் எனது மனைவி தடம் மாறி செல்வதை அறிந்து நான் வேதனை அடைந்தேன். இதுபற்றி எனது மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்தேன். இனிமேல் அந்த வாலிபருடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினேன்.
ஆத்திரத்தில் வெட்டினேன்..
ஆனால் எனது மனைவி நான் சொன்னதை கேட்கவே வில்லை. அவள் இஷ்டம்போல் அந்த வாலிபருடன் பழகி வந்தாள். இதனால் தினமும் மனைவியை கண்டித்து அவளுடன் தகராறு செய்தேன். நேற்று இரவு தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வெட்டினேன். இதில் அவள் இறந்து விட்டாள்.'இவ்வாறு விஜயகுமார் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.