குடிபோதையில் தகராறு செய்த கணவர்.. தூங்கும்போது போட்டுத்தள்ளிய மனைவி.. வாழப்பாடியில் பரப்பு!
குடிபோதையில் தினமும் தகாராறு செய்த கணவனை தூங்கும் போது மனைவியே கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: குடிபோதையில் தினமும் தகாராறு செய்த கணவனை தூங்கும் போது கைகால்களை கட்டிப்போட்டு மனைவியே கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும், கணபதி, வசந்தகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
புவனேஸ்வரிக்கு திருமணமாகிவிட்டது. தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக கணவர் வீட்டில் உள்ளார். கணபதி, வசந்தகுமார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
மதுவுக்கு அடிமையான கணவர்
இந்நிலையில் மதுவுக்கு அடிமையான முருகேசன் நாள்தோறும் குடித்துவிட்டு தனலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். செலவுக்கு பணம் கேட்டு மனைவி மற்றும் மகன்களையும் அடித்து உதைத்து வந்துள்ளார்.
அடித்து உதைத்து..
இதனால் நிம்மதியை இழந்த தனலட்சுமி ஒவ்வொரு நாளையும் கடினமாகவே நகர்த்தியுள்ளார். நேற்று முன்தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகேசன் அவரை தனலட்சுமி மற்றும் 2 மகன்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
கொலை செய்ய முடிவு
நாளுக்கு நாள் முருகேசனின் கொடுமை அதிகரிக்கவே மனம் உடைந்த தனலட்சுமி இனியும் கணவனை விட்டு வைத்தால் நிம்மதியாக வாழ முடியாது என எண்ணி அவரை கொல்ல முடிவு செய்தார்.
தூங்கிக்கொண்டிருந்த கணவன்
சண்டையிட்டு ஓய்ந்த பிறகு முருகேசன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
கழுத்தை இறுக்கி
இதுதான் சமயம் என கணவரை போட்டுத்தள்ள நினைத்த தனலட்சுமி முருகேசனின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டார். பின்னர் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் முருகேசன் துடிதுடித்து உயிரிழந்தார்.
போலீஸில் சரண்
இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மேல் போலீஸில் சரண் அடைய முடிவு செய்த அவர், 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனலட்சுமியை கைது செய்தனர்.
வாழப்பாடியில் அதிர்ச்சி
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் தகராறு செய்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.