வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஆதார் எண் கட்டாயம்!
சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கும் பணி மற்றும் 100 சதவீதம் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மே மாதம் 31ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். இதற்காக, கண்டிப்பாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் திட்டம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. இதன் மூலம், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், வயது, உறவினர் பெயர், முகவரி உள்ளிட்டவைகளில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்.
மேலும், ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் தானாக முன் வந்து நீக்கம் செய்வது, பழைய புகைப்படங்களை நீக்கி விட்டு புதிய போட்டோவை இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆதார் எண், செல்போன், தொலைபேசி, இ-மெயில் முகவரியை சேர்க்க வேண்டும். இவை கட்டாயமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 10, மே 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாமில் வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து திருத்தம் மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற திருத்தங்களை சிறப்பு முகாமில் உள்ள அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வழங்குவார்கள். இரட்டை பதிவை நீக்க படிவம்-7, பிழைகளை திருத்த படிவம்-8ஐ பயன்படுத்த வேண்டும். வீடு வீடாக படிவம்: மே மாதம் வரை ஓட்டுச்சாவடி
அலுவலர்கள் வீடு வீடாக வந்தும் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தம் மற்றும் ஆதார் எண் சேர்ப்பதற்கான படிவத்தை வழங் குவார்கள். அந்த படிவத்தை பொதுமக்கள் பூர்த்தி செய்து உடனடியாக அளித்தால் திருத்தம் மற்றும் ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.
தேர்தல் ஆணையம் சார்பில் இந்த செயல்பாடுகளுக்கு ‘51969‘ என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த எண்ணுக்கு செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பி திருத்தம் மற்றும் ஆதார் எண் இணைக்கலாம். தேர்தல் கட்டுப்பாடு அலுவலகம்: சென்னையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உள்ள 1950 தொலைபேசி எண் மற்றும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகங்களில் உள்ள 1077 என்ற தொலைபேசி எண் மூலமும் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.
தேர்தல் இணையதளம் மூலமும் புகைப்படம், திருத்தம் மற்றும் ஆதார் எண், தொலைபேசி எண்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் வரை திருத் தம்: இன்று முதல் மே மாதம் வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியத்திற்கு மேல் அனைத்து தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 5.5 கோடி வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் தவறு இல்லாத நிலையை ஏற்படுத்தவும், அனைவரின் ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலில் இணைக் கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைப்பதன் மூலம், ஒருவர் இரண்டு இடங்களில் பெயர் சேர்க்கும் முறையை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இதன்மூலம் 100 சதவீதம் குறைகளை சரி செய்து, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.
முன்னதாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), வழக்கறிஞர்கள் கிரிராஜன், பரந்தாமன் (திமுக), பார்த்திபன் எம்எல்ஏ, இளங்கோவன் (தேமுதிக), சக்கரவர்த்தி, ராகவன் (பாஜ), பாலசுப்பிரமணியன் (காங்கிரஸ்), செல்வசிங், ரமணி (மார்க்சிய கம்யூனிஸ்ட்), அழகிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), ராஜசேகர், சாரதி (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆதார் எண் இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்களை நடத்தி விரைவில் ஆதார் எண் வழங்கவும் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.