ஆடித்தபசு: கோமதி அம்மனுக்கு காட்சி தந்த சங்கர நாராயணர்… பக்தர்கள் தரிசனம்
சங்கரன் கோவில்: ‘ஹரியும் சிவனும் ஒன்று' என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் சங்கரன் கோவில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஊசிமுனையில் தவமிருந்த கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சியளித்த கோலத்தை மெய்சிலிர்க்க பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சங்கரன் கோவில் சங்கரநாராயணர்சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. காலை, மாலை கோயிலில் இருந்து அம்பாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலாவும் இரவில் மண்டகப்படிதாரர் சார்பில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதிஉலாவும் நடந்து வருகிறது.
ஆடித்தேரோட்டம்
9ம்திருநாளான காலை அம்பாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை அம்பாள், தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9.50 மணிக்கு பக்தர்களால் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 4 ரதவீதிகளை வலம் வந்ததேர், மதியம் 12.50 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
ஆடித்தபசு காட்சி
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு இன்று நடைபெற்றது. இதனையொட்டி அன்று காலை கோயிலின் மேற்கு பிரகாரம் யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்புஅபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் ஊசிமுனையில் ஒரு கையில் விபூதி பையுடன் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருந்தார்.
சங்கரநாராயணர் காட்சி
மாலை 4 மணியளவில் சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெற்குரதவீதி தபசு பந்தலை அடைந்தார். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேலரதவீதி தபசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள் மாலை 6.01 மணிக்கு புறப்பட்டு சங்கரநாராயணர் எழுந்தருளியிருந்த பந்தலின் எதிர்ப் பந்தலுக்கு வந்தார். சங்கரநாராயணரை மூன்று முறை வலம் வந்த கோமதி அம்பாள், மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினார். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாத்தப்பட்டது. இதையடுத்து, சங்கரநாராயணர் முகத்துக்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது. அப்போது, ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சி கொடுத்தார். இருவருக்கும் ஒரு சேரத் தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திக் கரகோஷம் எழுப்பினர்.
மூன்றடுக்குப் பாதுகாப்பு
ஆடித்தபசுவிழாவை முன்னிட்டு 3 யூனிட்டுகளாக 300க்கும் மேற்பட்ட போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் விழா நடைபெறும் பகுதியிலும், கோயிலுக்குள்ளும் பக்தர்கள் அச்சமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மப்டி உடையில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சங்கரன் கோவில் ஆலயம்
சங்கரநாராயணர் திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.
சக்தி வாய்ந்த அம்மன்
இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.
புற்று மண்ணே அருள் பிரசாதம்
இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.
சக்தி வாய்ந்த திருக்குளம்
இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாக தேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டிய தாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது. ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.