ஆறுகுட்டி அணி மாறியதால் எங்களுக்குப் பிரச்சனையில்லை.. சமாளிக்கும் ஓபிஎஸ் அணி
ஆறுகுட்டி எம்.எல்.ஏ அணி மாறியதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என ஓபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ஆறுகுட்டி அணி மாறியதால் ஓபிஎஸ் அணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அதிமுகவிலிருந்து விலகி தனி அணியானதும் முதன்முறையாக ஓடோடி வந்து ஆதரவு தெரிவித்தவர் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி. இவர் ஆர்கே நகர் இடைதேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிட்ட மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது நடனம் ஆடி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் திடீரென அவர் ஈபிஎஸ் அணிக்குத் தாவியதால் ஒபிஎஸ் அணியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஒபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆறுக்குட்டி அவருடைய தனிப்பட்ட காரணக்களுக்காக அணி மாறியுள்ளார். மேலும், அவர் அணி மாறியதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என கூறியுள்ளார்.
ஒபிஎஸ்ஸுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வந்த நிலையில் ஒருவர் அணி மாறியதால் இப்போது அது 11ஆக குறைந்துள்ளது. இதுவும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.