நெல்லையிலும் ஆவினுக்கு சிக்கல்...பால் பாக்கெட்கள் உடைந்து வீணாவதாக புகார்
திருநெல்வேலி: கோவையை தொடர்ந்து நெல்லை தூத்துக்குடியிலும் ஆவில் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போய் விடுவதாகவும், பாக்கெட்டுகள் உடைந்து பால் வீணாவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 385 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினமும் 80 ஆயிரம் லிட்டார் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 40 ஆயிரம் பால் விற்பனைக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக இரண்டு மாவட்டங்களிலும் 200க்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர்.
25 ஆயிரம்லிட்டர் பால் திருவனந்தபுரம். சேலம், ஈரோடு பகுதிகளுககு விற்பனைக்காக அனுப்பபடுகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தரமான பால் பொதுமக்களுக்கு கிடைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலில் தண்ணீர் கலப்பது, கொள்முதல் முறைகேடு என ஆவின் நிறுவனம் பல்வேறு வகைகளில சர்ச்சையில் சிக்கி வருகிறது.
நெல்லை ஆவின் மூலம் வினியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் சமீபகாலமாக பாக்கெட்டுகள் உடைந்து பால் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தரம் குறைந்த பிலிமை வாங்கி பாலை புல்லிங் பண்ணுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து முகவர்கள் சிலர் கூறுகையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து லீக்கேஜ் ஆகி வருகிறது. இதற்கு தரம் குறைந்த பிலிம் வாங்குவதே காரணம். இது மட்டுமல்லாது சில நாட்களில் பால் கெட்டு போய் விடுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தால் பாலை உடைக்காமல் கொண்டு வர வேண்டும் என ஆவின நிர்வாகம் தெரிவிக்கிறது. பாக்கெட்டை உடைத்து பாலை காய்ச்சும் போது திரிந்து போன பாலை எப்படி உடைக்காமல் கொண்டு போக முடியும். இதனால் நாங்கள் நஷ்டம் அடையும் நிலையில் உள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 50000 லிட்டர் பால் கெட்டுப்போனதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆவின் பால் கெட்டுப்போவதாகவும், வீணாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.