திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் கலாமின் சிலை அகற்றம்.. கடலூரில் பரபரப்பு!
கடலூர்: கடலூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலை திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்திலேயே போலீசாரால் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது.
இதை பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திறந்து வைத்தனர். இதனிடையே, சிலை திறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில், உரிய அனுமதியில்லாமல் சிலை வைத்ததாகக் கூறி அப்துல் கலாம் சிலையை போலீசார் அகற்றும்படி கூறினர்.
இதையடுத்து, இளைஞர்கள் அப்துல் கலாம் சிலையை அகற்றினர். கடந்த 35 நாட்களாக அனுமதி கேட்டு ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலத்தில் முறையிட்டு, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக சிலையை அமைத்த இளைஞர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.