சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.வை காப்பாற்ற மத்திய அரசு முயற்சியா? இல்லவே இல்லை… என்கிறார் தமிழிசை
சென்னை: எங்கே போனாலும்... என்ன பேசினாலும் சரி அதிமுக, திமுக உடன் கூட்டணி இல்லை என்பதே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனின் கருத்தாக இருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரையில் இதே கருத்தைப் பதிவு செய்தார் தமிழிசை... இப்போது அளித்துள்ள பேட்டியிலும் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்ற கருத்தையே கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசிவரும் தமிழிசை போகும் இடமெங்கும் அதிமுக உடன் கூட்டணியில்லை என்றே பதிவு செய்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி:
தனிப் பெரும் சக்தி
தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலைப் பொருத்தவரை நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
தனியாகவே போட்டி
உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் நாங்கள் தனியாகவே எதிர்கொண்டோம்.
நான் பொறுப்பாக மாட்டேன்
அதே கொள்கையே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகும் சூழல் இருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவிக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.
ஊழல் கட்சிகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தன. இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்.
பாஜக மாற்று சக்தி
ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாற மாட்டோம். இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வலுவான மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது" என்றார்.
ஜெயலலிதாவை காப்பாற்ற முயற்சி
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் மத்திய அரசு நீதித்துறைக்கு நெருக்கடி அளிப்பது போன்ற நிழலை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால், பாஜக அத்தகைய செயலில் ஈடுபடவில்லை.
கருணாநிதிக்கு கண்டனம்
கருணாநிதியின் முயற்சி கண்டனத்துக்குரியது. அவர் முன் நிறுத்த முற்படும் குற்றச்சாட்டு பொய்யானது. ஏன் நீதித்துறையே அவமதிப்பதற்கு சமமாகும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.