ஆளும் பாஜகவின் செயலால் பறிபோகும் மாநில உரிமை.. எம்எல்ஏ காட்டம்!
பாஜகவின் செயலால் மாநில அரசின் உரிமை பறிபோவதாக அபுபக்கர் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை: பாஜகவுக்கு இணக்கமாக போவதால் தமிழகத்தில் பல உரி்மைகள் பறிபோய் வருகின்றன என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவை சேர்ந்தவர்களே வெளிநாடுகளுக்கு மாட்டு இறைச்சிகளை ஏற்றுமதி செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளரும், கடையநல்லூர் எம்எல்ஏவுமான அபுபக்கர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, இறைச்சிக்காக இளம் மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்த பிறகு நடந்த போராட்டத்தில் பல உயிர்கள் பறி போயின. பாஜகவை சேர்ந்தவர்களே வெளிநாடுகளுக்கு மாட்டு இறைச்சிகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.
மத்திய அரசின் உத்தரவை கண்டித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீ்ர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜகவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அவர்களுக்கு பிடிக்காதவர்களுக்கு வருமான வரி துறையை ஏவி ரெய்டு நடத்தி வருகிறது.
தடை செய்யப்பட்ட பான் மசலா, குட்கா விற்க லஞ்சம் வாங்கியதை பற்றி பேச சட்டசபையில் அனுமதி மறுக்கிறார்கள். இதில் உரிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கூம்பு வடிவ ஓலி பெருக்கிக்காக போலீசார் பள்ளிவாசல் மற்றும் மசூதிகளுக்கு சென்று கடும் கெடுபிடி கொடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் தான் போலீஸ் அதிகாரிகள் கெடுபிடி செய்கிறார்கள்.
கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் குடியிருப்பு மற்றும் கோயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியால் அத்திவாசிய பொருட்கள் மீது விலை அதிகரிக்கும். ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு நிறைவேற்ற கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.