நெல்லையில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை: 27 கடைகளுக்கு ஆப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்த 27 கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு சென்றால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை கொண்டு வந்து கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லலாம் என்றும் கூறி போக்குவரத்து போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.
இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஹெல்மெட் கம்பெனிகள் நெல்லை சாலையோரங்களில் கடைகளை விரித்துள்ளன. இதில் பலர் போலி ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்துமாறு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஹெல்மெட் கடைகளில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இதில் 27 கடைகளில் உள்ள ஹெல்மெட்டுகள் விதிமுறைகளை மீறி இருப்பது தெரிய வந்தது. அந்த ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திசையன்விளையில் அதிக விலைக்கு விற்பனை செய்த ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெல்மெட் வாங்கும் போது பில் கேட்டு பெற வேண்டும். அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விலை குறியீட்டின் மேல் ஸ்டிக்கர் மூலமோ, எழுதி ஒட்டியோ பொருட்களின் விலை கிழிக்கப்பட்டிருந்தாலோ ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதுடன் தகவல் தெரிவிக்கலாம். அட்டை பெட்டியின்றி பாலீதின் கவரில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 27 வியாபாரிகள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மற்ற வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.