அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் நேற்று இயற்கை எய்தினார். அவரது படைப்புகள் காலம் கடந்து தமிழ் எழுத்துலகில் நிற்கும் என்று நடிகர் கமலஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
சென்னை: முதுபெரும் எழுத்தாளரான அசோகமித்ரன் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் அசோகமித்ரனின் மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து தமிழ் எழுத்துலகில் நிற்கும். அவரை வாசித்து, நேசித்து, சந்தித்து, பெருமை பெற்றவர்களில் நானும் ஒருவன். நன்றி அவரது படைப்புகளுக்கு,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
86 வயதான அசோகமித்திரன், நாவல்கள், சிறுகதைகள் என தனது படைப்புகள் மூலம் தமிழ் எழுத்துலகின் வாசகர்களை தனது வசமாக்கிக் கொண்டனர். உடல்நலக்குறைவால் நேற்று அவர் சென்னையில் காலமானார்.
இதே போன்று எழுத்தாளர் அசோகமித்திரன் மறைவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 'நவீனத் தமிழ் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை' என்று தனது இணையதள பக்கத்தில் ஜெயமோகன் பதிவிட்டுள்ளார்.
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2017