கார்டு, கடுதாசி, லெட்டர் வேண்டாம்!டிஜிட்டலில் ஊழல் ஆதாரங்களை அனுப்புங்க - கமல் வேண்டுகோள்
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ஊழல் செய்யும் அமைச்சர்கள் பற்றியும், துறை சார்ந்த ஊழல்கள் குறித்தும் விவரங்களை ஆதாரத்தோடு டிஜிட்டலில் பதிவு செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள
சென்னை: ஊழல் பற்றிய தகவல்களை, உரிய ஆதாரங்களோடு டிஜிட்டலில் அமைச்சர்களின் துறைகளுக்கே அனுப்புங்கள் என்று ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள விளக்க டுவிட்டர் அறிக்கையில், " ஊழலே இல்ல நிரூபி பார்ப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கடுதாசி, லெட்டர் வேணாம். கிழிச்சுப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்யுங்க. ஆனா மரியாதை தவறாம அதச் செய்ங்க.." என்று ஊழலுக்கு எதிரானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய அரசியல், தமிழக அரசியல் குறித்த கருத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடுமையான எதிர் கருத்துக்களை கொட்டியிருந்தனர்.
இதில் எச். ராஜா, 'கோழை' என்று கமல்ஹாசனை நேரடியாக, கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு கமலின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ராஜாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
எச்.ராஜாவின் விமர்சனம் கமல் மனதில் பெரிய அளவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய அவரின் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து இருந்த அரசியல்வாதிகள் மத்தியில் கமலின் அரசியல் அதிரடிகள் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளன.