என்ன நடக்குது? முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்கம்... புதிய தலைவர் நியமனம்!
முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் நீக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் இன்று அறிவித்தனர். அதே வேளையில் அந்த அமைப்புக்கு இடைக்காலத் தலைவராக சந்தனபாண்டி நியமிக்கப்பட்டார்.
மதுரை: அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து எம்எல்ஏ கருணாஸ் நீக்கப்பட்டதாக நிர்வாகிகள் அறிவித்தனர். அதேநேரத்தில் அந்த அமைப்புக்கு இடைக்காலத் தலைவராக சந்தனபாண்டி நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அணுகியது. அப்போது கூட்டணி அமைக்க ஒப்புதல் தெரிவித்த ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கராராக தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தில் ரசிகருடன் செல்பி, சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கினார் கருணாஸ்.
இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்படுவதாக அனைத்து நிர்வாகிகளையும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீக்கிய அவர் விரைவில் மாவட்ட ஒன்றிய, நகர கூட்டங்கள் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து எம்.எல்.ஏ. கருணாஸ் நீக்கப்பட்டுள்ளதாக அவரால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மதுரையில் புலிப்படை செயலாளர் பாண்டித்துரை, துணைத் தலைவர் சந்தானகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
அப்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளைக்கு மட்டுமே அறங்காவலராக கருணாஸ் செயல்படலாம். கட்சியின் இடைக்காலத் தலைவராக சந்தனபாண்டி நியமிக்கப்படுகிறார். மற்றபடி நாங்கள் அணி மாறி செயல்படுவதாக கருணாஸ் கூறுவது உண்மையல்ல. நாங்கள் தினகரனுக்கு ஆதரவாகவே செயல்படுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.