மறைந்த நடிகர் 'பசி' நாராயணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- ஜெ., அறிவிப்பு
சென்னை: மறைந்த நடிகர் 'பசி'நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து பசி நாராயணன் மனைவி வள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சூரியன் படத்தில் வரும் 'போன் வயர் பிஞ்சு நாலு நாள் ஆச்சு...' என்ற வசனத்தை பேசி பிரபலமானவர் பசி நாராயணன். தமிழ் திரை உலகில் 500 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற பசி நாராயணன் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.
தமிழ்நாட்டின் சிவகாசி மாவட்டத்தில் பிறந்தவர் நாராயணன். சிறுவயதிலே இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 15 வயதில் இருந்தே நாடகத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் மனோகர் கம்பெனி மூலம் 1955ம் காலகட்டத்தில் பல நாடகங்களில் நடித்து வந்தார். அதன்பின் சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
பசி படத்தில் அறிமுகம்
தமிழ்த் திரையுலகிற்கு 1970ம் ஆண்டில் வந்துவிட்டாலும் பசி என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பசி' நாராயணன் என்ற பட்டப்பெயருடன் திரை உலகில் பிரபலமடைந்தார்.
பிரபலமான நாராயணன்
நாராயணன் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தாலும், அவரது பெயர் முத்திரை பதிக்கும் அளவிற்கு பெரிய அளவிற்கு பேசும்படியாக இருந்தன.
அதனை தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, ஆணிவேர், அக்கரைப் பச்சை, கன்னிராசி, செந்தூரப் பூவே, சிவா, ஆனந்த கும்மி, முள்ளில்லாத ரோஜா, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து திரை உலகில் பிரபலமடைந்தார்.
எம்.ஜி.ஆரின் அன்பே வா
நடிப்பில் மட்டுமின்றி, கதை, வசனம் எழுதுவதிலும், நடனத்திலும் தனி திறமை கொண்டிருந்தார். ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்து எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த ‘அன்பே வா' படத்தில் ‘நாடோடி போக வேண்டும் ஓடோடி' எனும் ஒரு பாடலில் நடன கலைஞராக வந்துள்ளார். பல தனித் திறமைகள் பல இருந்தாலும், பசி படத்தின் மூலமே சாதாரண ரசிகனுக்கும் அடையாளம் காணப்பட்டார்.
ஆயிரத்தில் ஒருவன்
தமிழ் திரை உலகில் எம்.ஜி.ஆர், முதல்வர் ஜெயலலிதா புகழ்பெற்ற காலக்கட்டத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தவர். அதன்பிந்தைய தலைமுறையான ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி கதாநாயகர்களின் பல படத்திலும் பசி நாராயணன் பங்கு இருந்தது.
சரத்குமாரின் சூரியன்
ராஜாதி ராஜா, எஜமான், முத்து போன்ற படங்களில் பசி நாராயணன் நடித்தார். பின்னர் வெவ்வேறு காலக்கட்டத்தில் புகழ்பெற்ற ராமராஜன், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்தார். சூரியன் படத்தில் நகைச்சுவையில் புகழ்பெற்ற கவுண்டமணியுடன் அவர் பேசிய போன் ஒயர் கட்டாகி ஒரு வாரம் ஆச்சி என்ற வசனம் பிரபலம் ஆனது.
இதயநோயினால் மரணம்
உடுமலையில் 1998ம் ஆண்டு ‘நினைத்தேன் வந்தாய்' படப்பிடிப்பு நடந்த சமயத்தில் இதயம் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பசி நாராயணன் உயிரோடு இருக்கும் காலத்தில் எந்தவித வறுமையும் தெரியாமல் இருந்த அவரது குடும்பம், அவர் இறந்த பிறகு வறுமையின் கொடிய பிடியில் சிக்க ஆரம்பித்தது.
வறுமையில் வாடும் குடும்பம்
இதனால் அவரது மனைவி வள்ளி, முதல் மகள் ரேவதி, இரண்டாவது மகள் ஞான ஜோதி, மூத்த மகன் மாரியப்பன் ஆகியோர் வறுமையில் சிக்க ஆரம்பித்தனர். குடும்பத்தில் நிலவிய வறுமை காலந்தோறும் அதிகமானதால், பசி நாராயணனின் விருதுகள் விற்கப்பட்டன. 2 மகள்களின் படிப்பு இடையில் நிறுத்தப்பட்டன.
கண்டுகொள்ளாத நடிகர் சங்கம்
எங்களின் வறுமை நிலையை நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த், சரத்குமார் முதல் இப்போதைய நடிகர் சங்க தலைவர் நாசரிடமும் உதவி கேட்டோம். இருந்தும் எந்த பயனும் இல்லை நடிகர் சங்கத்தில் அப்பா உறுப்பினராக இல்லை என கூறி நடிகர் சங்கமும் உதவ முன்வரவில்லை என்று பசி நாராயணனின் மகள் கூறியதாக செய்தி வெளியானது.
நடிகர் சங்கம் மறுப்பு
நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான திரு. ‘பசி நாராயணன்' இறந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் கஷ்டப்படுவதாக தெரிந்தபோது, அவர்களது நிலைமை புரிந்து கொண்டு நிர்வாகம் உதவி கரம் நீட்டியது என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. 19.01.2016 அன்று அவரது மகள் ஆர்.ரேவதிக்கு காசோலையாக ரூபாய் 35000/- (ஐசிஐசிஐ வங்கி காசோலை எண்.636529) தொழில் உதவியாக வழங்கியதாக கூறியது.
முதல்வர் ஜெ., ரூ. 10 லட்சம் நிதி உதவி
பசி நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பசி நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாராயணன் குடும்பத்திற்கு நிதி
இந்த 10 லட்சம் ரூபாய் பசி நாராயணனின் மனைவி வள்ளி பெயரில் ‘தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்' வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்க பெறும். இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.