நடிகர் எஸ்.வி.சேகர் பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கு: காவல்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு !
சென்னை: நடிகர் எஸ்.வி. சேகர் பாதுகாப்பு கோரி சென்னை ஹைகோர்டில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கர்நாடகத்தைச் சேர்ந்த இயக்குநர் கு.கணேசன், "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
அவருடைய கதையை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டது இந்த தமிழ்ப் படம். இப்படத்தினை டைரக்டர் கணேசன் இயக்கி உள்ளார். இந்நிலையில், இந்த படத்துக்கு தணிக்கைக்குழு உறுப்பினராக இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இசைப்பிரியா மரணம் குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை தமிழ் ஆதரவாளர்கள் எஸ்.வி.சேகருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு கோரி சென்னை ஹைகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், இலங்கை இறுதிகட்டப்போர் மற்றும் இசைப்பிரியாவின் மரணம் ஆகியவற்றை கதைக்களமாக கொண்ட "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்ததால், தொலைபேசி, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக சிலர் மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் எஸ்.வி. சேகரின் மனுவை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.