வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்ற சூரி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கத்துக்குட்டி திரைப்படக் குழுவினர் சந்தித்துப் பேசினர். நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வைகோ பொன்னாடை போர்த்தி வாழ்த்து .கூறினார்.
நடிகர்கள் அரசியல் வருவதற்கு புதிதல்ல. காமெடி நடிகர் வடிவேலு அரசியலில் நுழைந்து கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நடிகர் சந்தானம் அவ்வப்போது பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தனது அரசியல் பாசத்தை வெளிப்படுத்துவார்.
இப்போது சூரி டைம் போல அதனால்தான் அரசியல்தலைவர்களின் வாழ்த்தும், அவரை நேரில் சந்தித்து ஆசியும் பெற்று வருகிறார். சூரியின் பிறந்தநாளுக்கு நடிகர்கள் மட்டுமல்லாது சீமான் உள்ளிட்ட அரசியல் ரீதியான தலைவர்களும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று காலை அவரது சென்னை அண்ணா நகர் இல்லத்தில் கத்துக்குட்டி திரைப்பட தயாரிப்பாளர் முருகன், திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், குணசித்திர நடிகர் சூரி ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினர்.
வைகோவிற்கு நடிகர் சூரி மலர் கொத்துக்களை வழங்கினார். அப்போது வைகோ சூரிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.