பாஜகவில் நடிகர் விஜயக்குமார்.. கட்சிக்குப் பல மடங்கு பலம் கூடியதாக பொன். ராதா புளகாங்கிதம்!
சென்னை: நடிகர் விஜயக்குமார் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவரது வருகையால் பாஜகவுக்கு பல மடங்கு வளர்ச்சி ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினி்மாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயக்குமார். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல் வரை பல மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இப்போது வரை தொடர்ந்து நடித்து வருபவர். இவர் இயக்குநர் ஹரியின் மாமனாரும் ஆவார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதா அபிமானியாக இருந்தவர். கருணாநிதியுடனும் நட்பு பாராட்டியவர். மதிமுக மீது அபிமானம் கொண்டவரும் கூட. வைகோ மாதிரியே கெட்டப்பில் ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திடீரென பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார் விஜயக்குமார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் சென்ற அவர் அங்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருக்கு பொன். ராதாகிருஷ்ணன், முரளிதரராவ் ஆகியோர் பொன்னாடை பாோர்த்தி வரவேற்றனர். பின்னர் விஜயக்குமாரும், பொன் ராதாகிருஷ்ணனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் என்னைக் கவர்ந்தன. எனவேதான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.
பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் நடிகர் விஜயக்குமாரின் வருகையில் பாஜகவின் பலம் பலமடங்கு வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆக, பாஜகவுக்கு புதிதாக ஒரு பிரசார பீரங்கி கிடைச்சாச்சு!