கமலுக்கு செவாலியே விருது.. மோடி தலைமையில் பிரமாண்ட விழா.. வெங்கய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை
நடிகர் கமல் ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரமாண்ட விழா பிரதமர் மோடி தலைமையில் நடத்த விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சங்க நிர்வாகிகளை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜி.எஸ்.டி., திருட்டு டி.வி.டி. ஒழிப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வெங்கையா நாயுடுவிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருட்டு டிவிடி தொடர்பாக நிறைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் தலையீடு இருந்தால் வெகு விரைவில் திருட்டு டிவிடியை ஒழிக்க முடியும்.
திருட்டு டிவிடி
திருட்டு டிவிடி என்பது மாநில அளவில் மட்டுமல்ல மத்திய அரசு அளவிலும் நடவடிக்கை எடுத்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. திரைப்படங்களை டவுன்லோட் செய்து போனில் பார்க்கிறார்கள். இதன்மூலம் தெரிந்தோ தெரியாமலே பலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஒவ்வொரு டவுன்லோடுடிலும் பணம் பார்க்கப்படுகிறது. இது குறித்தெல்லாம் ஒரு நியாயமான கோரிக்கையை அமைச்சரிடம் வைத்துள்ளோம். அடுத்தக்கட்ட கூட்டத்தில் நல்ல முடிவு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
வரி அதிகம்
ஜி.எஸ்.டி. பொறுத்தவரை 1000 கோடி ரூபாய் செலவில் வெளியாகும் ஹாலிவுட் படத்திற்கும் ஒரு கோடி ரூபாய் செலவில் வெளியாகும் தமிழ் திரைப்படத்திற்கும் ஒரே மாதிரி வரி விதிப்புகள் விதித்தால் கண்டிப்பாக பாதிப்புகள் ஏற்படும். தமிழ் சினிமாவிற்கு குறைந்த வரி விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். ஜி.எஸ்.டி. பற்றி அமைச்சகத்திடம் பேசி முடிவெடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளார்.
செவாலியே விழா
நடிகர் கமல் ஹாசனுக்கு பிரெஞ்சு நாடு செவாலேயே விருது வழங்கியுள்ளது. கமலை பாராட்டும் வகையில் இந்திய அளவில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் தலைமையில் நடக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரியுள்ளோம்.
நம்பிக்கை
நாங்கள் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட அமைச்சர் வெங்கய்ய நாயுடு நல்ல முடிவை தெரிவிப்பார் என்று நம்புகிறோம் என்று விஷால் கூறினார். அவருடன் நடிகர் கார்த்தி உடன் இருந்தார்.