விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய நடிகர்!
தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் விஷால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் விஷால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். விவசாயிகளின் வறுமையை போக்க விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்ததால் ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர்.
பலர் கருகிய பயிர்களை கண்டு தற்கொலை செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய
— Vishal warriors (@Vishal_warriors) June 20, 2017
முதல்வருக்கு நடிகர் #விஷால் கடிதம்#SaveAgriculture @rameshlaus pic.twitter.com/oy1mrz1FT9
ஆனால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் மறுத்துவிட்டன. இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைப் போல் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் வறுமையை போக்க கடன்களை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்றும் விஷால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.