4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!
அதிமுக அரசின் மீதமுள்ள 4 ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இரு கோஷ்டிகளும் சர்க்கஸ் செய்து வருகின்றன என்று நடிகை குஷ்பு சாடியுள்ளார்.
மதுரை: அதிமுக அரசின் மீதமுள்ள 4 ஆண்டுகால ஆட்சியில் பணம் சம்பாதித்துக் கொள்ள இரு கோஷ்டிகளும் ஒன்றிணைவது குறித்து சர்க்கஸ் நடத்தி வருகின்றன என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ சாடியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் தற்போது இணைவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சர்க்கஸ் போன்று உள்ளது.
ஜெ.வுக்குதான் ஓட்டு
இந்த இரு அணிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான வழியை தேடுகின்றனரே தவிர விவசாயிகள் போராட்டத்தில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்தார்களே இந்த இரு கோஷ்டிகளுக்கு அல்ல.
இரட்டை இலைதான்...
மேலும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள். தொப்பிக்கோ, இரட்டை விளக்கிற்கோ ஓட்டு போட மாட்டார்கள். அதனால் இந்த இரு அணிகளும் இணைவது என்பது மீதமுள்ள 4 ஆண்டுகளில் கூடுமானவரை பணத்தை சம்பாதித்துக் கொள்ளத்தான்.
செஸ் விளையாடும் பாஜக
இந்த இரு அணிகள்தான் சர்க்கஸ் செய்யகிறது என்றால் தமிழக அரசியலில் இவர்களை வைத்து பாஜக செஸ் விளையாடுகிறது. டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து பல்வேறு வகையில் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்லைப்புற ஆட்சி
இவர்களை முதல்வரோ , பிரதமரோ சந்திக்கவில்லை. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்திலும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. இவ்வாறு குஷ்பு கூறினார்.