ஓஎன்ஜிசி சுற்றுச் சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்.. திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் அடியக்கமங்கலம் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர்: அடியக்கமங்கலம் ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அய்யனார் கோயில் அருகில் கடந்த 11ம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது. கோயில் அருகில் கிராம மக்கள் கூடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் அடுத்தடுத்த பகுதிக்கும் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. திருவாரூர் அருகில் அடியக்கமங்கலம் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சுற்றுச் சுவர் கட்டும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.