பிடிங்க எங்க ஆதரவு...அதிமுகவின் 3 கோஷ்டியும் போட்டா போட்டி சப்போர்ட்!
ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் 3 கோஷ்டியினரும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை : அதிமுகவின் ஈபிஎஸ்,ஓ.பிஎஸ் மற்றும் தினகரன் அணி என 3 கோஷ்டியும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக ஆளும் மாநில எம்.எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்த தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது.
ஏனெனில் அதிமுகவின் 3 கோஷ்டிகளில் எந்த கோஷ்டி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்றும் அனைவராலும் உற்றுபார்க்கப்பட்டது. அதிமுக ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கட்சி என்ற கர்வத்தையெல்லாம் உடைத்து, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆளாளுக்கு தங்கள் இஷ்டத்திற்கு ஆடத் தொடங்கினர்.
முந்திக் கொண்ட பழனிசாமி
பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுமே பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டதாக முதல்வர் பழனிசாமி கூறினார். இதன் அடிப்படையில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலில் ஆதரவை தெரிவித்து பாஜக அபிமானத்தை பெற்றார் பழனிசாமி. இந்தக் கூட்டத்தில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
கேட்டதால் கொடுத்தோம்
இதனையடுத்து எங்களை தொடர்பு கொண்டதால் நாங்களும் ஆதரவு கொடுக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி அறிவித்தது. பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் அவருக்கு எங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சசி தான் சொல்ல வேண்டும்
முதல்வர் பழனிசாமி சொன்னாலும் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளரின் அறிவிப்பை அடுத்தே தங்களின் ஆதரவு என்று முறுகிக் கொண்டு இருந்தனர் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள். கடந்த 19ம் தேதி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்து விட்டு வந்தனர்.
தினகரனும் ஆதரவு
ஒரு வழியாக இரண்டு அணியும் கையைதூக்கி ஆதரவை தெரிவிக்க மூன்றாவது அணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்விக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தனது அடையாறு இல்ல விலாசத்தில் அதிமுக அம்மா அணி பெயர் அச்சிடப்பட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் எம்.பி, எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் எனக்குக் கீழ் தான்
தினகரனின் இந்த அறிக்கை மூலம் அவர் சொல்ல வருவது பாஜகவிற்கு அதிமுக ஆதரவு என்பது மட்டுமல்ல. கட்சியினர் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தொடர் முயற்சி என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.