ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவுக்கு மட்டும் தனி கோஷ்டி.. தேர்தல் பணிக்குழுவுக்கு தினகரன் கொடுத்த ஐடியா
ஆர்கே நகரில் பணப் பட்டுவாடா செய்வதற்கு என்றே தனி கோஷ்டி இறக்குவது என்பதுதான் டிடிவி தினகரனின் திட்டமாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடாவுக்கு கட்சியினர் அல்லாத தனி கோஷ்டியை ஈடுபடுத்தலாம் என அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் பணிக்குழுவுக்கு தினகரன் ஐடியா கொடுத்துள்ளாராம்.
அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தினகரனும் பங்கேற்றார்.
ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தல் பணிக்குழுவுக்கு நூற்றுக்கணக்கானோரை அதிகாரப்பூர்வமாக நியமித்திருக்கிறார் தினகரன். இவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்கள் நியமனம், அவர்களை கண்காணிப்பதற்கு குழுக்கள் என பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அத்துடன் பகுதி வாரியாக 100, 100 வாக்குகளாகப் பிரித்து அவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவும் தீர்மானிக்கப்பட்டதாம்.
இப்படி பண பட்டுவாடா செய்ய கட்சிக்காரர்களை பயன்படுத்தினால் ஓபிஎஸ் அணி அடையாளம் கண்டுவிடும்; அதனால் கட்சி சாராத நபர்களை வைத்து பணப்பட்டுவாடா செய்யலாம் என ஐடியா கொடுத்தாராம் தினகரன்.