அம்மா அணி எம்.எல்.ஏக்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தரவு : அதிமுகவில் பரபரப்பு
அம்மா அணியின் எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கி இருக்க, தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை : அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தங்கியிருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்க அதிமுகவில் சூழ்ச்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில் இந்த உத்தரவு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் தங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக தலைமைக் கழக தரப்பில் கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த உத்தரவுக்குப் பின்னால் அரசியல் சூது இருக்கிறதா என்பது திங்கள் கிழமைக்குப் பிறகுதான் தெரிய வரும் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த உத்தரவு குறித்து அரசியல் வட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தீபா அணி என்று பல அணிகளாக சிதறிக் கிடக்கும் அதிமுக, ஆட்சி என்ற ஒரு விஷயத்தால் மட்டுமே ஒட்டியுள்ளதாக கூறுகிறார்கள் அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழக சீனியர்கள் சிலரிடம் கேட்டபோது, " ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதால் அதிமுக தலைமை எம்எல்ஏக்களை சென்னையில் தங்க அறிவுறுத்தியுள்ளது. அதிமுக அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் சரியாகும்." என்று கூறினர்.