சென்னை: 200 வார்டுகளிலும் அதிமுக போட்டி- பாலகங்கா, ஜேசிடி பிரபாகருக்கு சீட்..!
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான வேட்பாளர் பட்டியலில் ராஜ்யசபா உறுப்பினர் பாலகங்கா, ஸ்டாலினை எதிர்த்து சட்டசபைத் தேர்தலில் கௌத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஜேசிடி பிரபாகர் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19ம் தேதி இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.
12 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பட்டியல், சென்னை மாநகராட்சிக்கான 200 வார்களுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 108 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு (பெண்கள்) 16 வார்டுகள், பெண்கள் (பொது) 92 வார்டுகள், தாழ்த்தப்பட்டோர் (பொது) 16 வார்டுகள் என மொத்தம் 124 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 76 வார்டுகள் பொதுவானவை. அதில் ஆண்கள் அல்லது பெண்கள் போட்டியிடலாம்.
அதிமுகவில் 200 வார்டுகளில் வேட்பாளர்கள் யார் யார்?
அதிமுக வேட்பாளர் பட்டியலில் அதிக அளவில் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். பட்டப்படிப்பு படித்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் 1வது வார்டில் எழிழரசி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சி. பி.எட் படித்துள்ள இவர் மாமன்ற உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2வது வார்டில் செல்வம், 3வது வார்டில் பொம்மி ஆகியோர் போட்டியிடுவார்கள் என ஜெயலலிதா அறிவித்துள்ளார். 7வது வார்டில் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் போட்டியிடுகிறார்.
78வது வார்டில் பாலகங்காவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 80வது வார்டில் ஜே.சி.டி பிரபாகர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளில் அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.